கள்ளக்குறிச்சி விபத்து : டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார்..4 பேர் பலி!
விபத்தில் ஆயுதப்படை காவலர் உட்பட 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கள்ளக்குறிச்சி : மாவட்டம், திருக்கோவிலூர் அருகே அன்று நடந்த பயங்கர கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவிலூர்-விழுப்புரம் நெடுஞ்சாலையில், மணலூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த கார், டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில், காரில் பயணித்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் 5 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. படுகாயமடைந்த 5 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், அவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து மணலூர்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் சாலையின் மோசமான நிலை மற்றும் வேகத்தடை இல்லாதது விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விசாரணை முடிந்த பிறகு விபத்து நடந்ததற்கான காரணம் என்ன என்பது பற்றி காவல்துறை விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.