எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை – வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்..!

தமிழகத்தில் எட்டு வழிச்சாலை,ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு அனுமதியில்லை என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகள் சீரமைக்கப்பட்டு,மேலும் 120 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்றும் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது ,”தமிழகத்தில் உழவர் சந்தைகள் பராமரிப்பின்றி உள்ளன.எனவே,உழவர் சந்தைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு,அவை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.மேலும்,120 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்படும். அதுமட்டுமல்லாமல்,தோட்டக்கலைத்துறை சார்பில் 24 செம்மொழி பூங்காக்களும் அமைக்கப்படும்”,என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,”புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்.மேலும்,சேலம் 8 வழிச்சாலை திட்டம் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவை தமிழகத்தில் ஒருபோதும் அனுமதிக்கப்படாது”,என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.