பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வேறு வேலை – கனிமொழி எம்பி உறுதி

பணி நீக்கம் செய்யப்பட்ட ஷர்மிளாவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உறுதியளித்த எம்.பி. கனிமொழி.
கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக வலம் வந்த ஷர்மிளா இன்று திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார். அதுவும் இன்று காலை திமுக எம்பி கனிமொழி, பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை பார்ப்பதற்காக பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது, பேருந்தில் டிக்கெட் கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இது குறித்து ஓட்டுநர் ஷர்மிளா கூறுகையில், திமுக எம்பி கனிமொழி தன்னை பார்க்க பேருந்தில் பயணித்ததாகவும், அப்போது பெண் நடத்துனர் டிக்கெட் கேட்கையில், கனிமொழி எம்பி உடன் வந்தவர்களிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து புகார் அளிக்க தனது தந்தையுடன் பேருந்து உரிமையாளரை அலுவலகத்தில் சந்தித்தேன்.
அப்போது, கனிவாக பேசிய உரிமையாளர் பின்னர், நீ பிரபலமாகிவிட்டதால் உன்னை பார்க்க ஆட்கள் வருவது உன் தப்பு என்றது போல பேசியதாகவும், தான் கனிமொழி எம்பி வருவதை முன்னரே கூறவில்லை என்றும் குறிப்பிட்டார். வாக்குவாதம் முற்றியதால், உன் மகளை கூட்டிக்கொண்டு செல் என உரிமையாளர் தெரிவித்ததால், நானும், தனது தந்தையும் அங்கிருந்து வந்துவிட்டோம் என்றார்.
இதையடுத்து, பெண் ஓட்டுநர் ஷர்மிளா தானாகவே விருப்பப்பட்டு பணியில் இருந்து விலகினார். அவரை நாங்கள் விலக சொல்லவில்லை என்று தனியார் பேருந்து உரிமையாளர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வேறு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக எம்.பி. கனிமொழி உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷர்மிளா பணியில் இருந்து நீக்கப்பட்டதை அறிந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார் எம்.பி. கனிமொழி. அப்போது, ஷர்மிளாவுக்கு வேறு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.