பொது சிவில் சட்டம்: கேரள சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர்!

மத்திய பாஜக அரசு நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை கொண்டுவர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மதம், இனம் சார்ந்து தனித்தனி சட்டம் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றுவதற்காக வேலைகளை ஆரம்பித்து அதற்காக மாநிலங்களில் பொது மக்களின் கருத்தை கேட்கவும் அனுப்பி வைத்தனர்.
பொது சிவில் சட்டம் (Uniform civil code) என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொதுவான உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களைக் குறிக்கிறது. அதாவது, இந்தியாவில் பல்வேறு மதங்கள், இனங்கள் இருக்கின்றது. அவர்களுக்குள்ளே ஓர் கட்டுப்பாடு ஒன்றும் இருக்கிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள், பழங்குடியினர் என அவர்களுக்குள்ளே திருமணம், விவாகரத்து உள்ளிட்ட குடும்ப பிரச்சனைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கிறது.
இதனை கலைந்து அனைத்து இன மத மக்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை உருவாக்குவதே இந்த பொது சிவில் சட்டத்தின் நோக்கமாகும். இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்த சட்டத்தை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பொது சிவில் சட்டத்திற்கு எதிராக, கேரள சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர் பினராயி விஜயன்.
நாட்டில் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்தும் திட்டத்தில் இருந்து பாஜக தலைமையிலான மத்திய அரசை விலக வலியுறுத்தும் வகையில் கேரள மாநில சட்டப்பேரவையில் இடதுசாரி அரசு தீர்மானம் கொண்டு வருகிறது. ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையில் இருந்து மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அரசு தனது தீர்மானத்தில் வலியுறுத்தும்.
மாநிலத்தில் ஆளும் இடதுசாரிகள் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான UDF மற்றும் மாநிலத்தில் உள்ள பல்வேறு மத அமைப்புகள் UCC க்கு எதிராக குரல் எழுப்பி வரும் நிலையில், இன்று தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையை அழிக்கும் செயலாகும். ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையில் இருந்து மத்திய அரசும், சட்ட ஆணையமும் விலக வேண்டும் என கூறியுள்ளார்.