உலக வளர்ச்சிக்கான இன்ஜினாக இந்தியா விளங்கும் – பிரதமர் மோடி

பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இம்மாநாடு காணொலி முறையில் நடைபெற்றது. 3 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக பிரிக்ஸ் மாநாட்டில் தலைவர்கள் நேரடியாக பங்கேற்றுள்ளனர்.
பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, மூன்று நாட்கள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். வாட்டர்க்ளூஃப் விமானப் படை தளத்தில் தரையிறங்கிய மோடிக்கு அரசு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில், மாநாட்டில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வா, சீன அதிபர் ஜி ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நேற்று நடைபெற்ற மாநாட்டின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்டும். உலக வளர்ச்சிக்கான இன்ஜினாக இந்தியா விளங்கும் என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று தெருவோர வியாபாரிகளால் கூட யு.பி.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிரிக்ஸ் அமைப்பில் தற்போது 5 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள நிலையில், மேலும் சில நாடுகள் இணைந்து பெரிய அளவிலான அமைப்பாக மாறவேண்டும் என்பதும் தான் எனது விருப்பம். இதற்கு இந்தியாதனது முழு ஆதரவை தெரிவிக்கிறது. மேலும், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் கருத்தொற்றுமையுடன் இந்த விரிவாக்கம் நடைபெறவேண்டும் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, பிரிக்ஸ் அமைப்பில் அர்ஜென்டினா, எதியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, யுஏஇ ஆகிய நாடுகள் இனி நிரந்தர உறுப்பு நாடுகளாக பங்கேற்கும் என்று தென் ஆபிரிக்கா அதிபர் சிரில் ராம்போசா அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி சந்திராயன்-3 வெற்றிக்கு உலக நாடுகள் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். இந்த சாதனை மனிதகுலம் அனைவருக்கும் கிடைத்த சாதனையாக ஏற்றுக் கொள்ளப்படுவது எங்களுக்கு பெருமை அளிக்கிறது என டெஹ்ரிவித்துள்ளார்.