இதற்கு மேல் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது – கர்நாடகா திட்டவட்டம்!

காவிரியில் இருந்து இதற்கு மேல் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடக அரசு வாதத்தில், தமிழகத்திற்கு இனி தண்ணீரை திறக்க முடியாது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 53% மழை பற்றாக்குறை நீடிக்கிறது. கர்நாடகாவில் 4 அணைகளிலும் செப்.25 வரை நீர்வரத்து கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது 53.04 சதவீதம் குறைந்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள 161 தாலுகாக்களை வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அரசு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். 161 தாலுகாக்களில் 34 தாலுகாக்கள் மிதமான வறட்சி, 32 தாலுகாக்கள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, 161 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இனி நீரை திறக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால், கர்நாடகா காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீர் தருவது இல்லை. இதுதொடர்பாக நீண்ட காலம் சட்ட போராட்டங்கள் நடந்தன. கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டும், தண்ணீர் தர மறுக்கிறது. போதுமான தண்ணீர் இல்லாததால் திறக்க இயலாது என கூறி வருகிறது. இதனால் இரு மாநிலங்களிலும் பிரச்சனை நீடித்து வருகிறது.
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் அதை கர்நாடகா மதிப்பதில்லை என கூறி கர்நாடகா அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு ஒருபக்கம் சட்ட போராட்டமும் நடத்தி வருகிறது. மறுப்புறம், கர்நாடக மக்கள் நலனே முக்கியம், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என கர்நாடகா தெரிவித்து வருகிறது. இதனால் தமிழ்நாடு, கர்நாடகா இடையேயான காவிரி நீர் பங்கீட்டு விவகாரம் பூதாகரமாகி உள்ளது. இந்த சமயத்தில் தமிழகத்திற்கு இனி தண்ணீரை திறக்க முடியாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.