நாமக்கல் மக்களே…டேங்கர் லாரியில் இருந்தது சமையல் எண்ணெய் இல்லை! காவல்துறை விளக்கம்!
டேங்கர் லாரியில் இருந்தது சுத்திகரிக்கப்படாத மற்றும் சமையலுக்கு பயன்படாத எண்ணெய் என நாமக்கல் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி நாமக்கல் மாவட்டம், நாமக்கல் உட்கோட்டம், நல்லிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதன்சந்தை மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது வாகனம் பழுது ஏற்பட்டது.
திடீரென பழுது ஏற்பற்ற காரணத்தால் உடனடியாக லாரி மேம்பாலத்தில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டது. வாகனத்தின் மீது அதிகாலை 05.00 மணியளவில் அடையாளம் தெரியாத மற்றொரு வாகனம் மோதியதில் ஆயில் டேங்கில் கசிவு ஏற்பட்டு சோயா ஆயில் ரோட்டில் ஊற்றியது. உடனே இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் வேகமாக எண்ணெய்யை எடுத்துக்கொள்ள முயற்சி செய்தார்கள்.
ஒரு சிலர் வீட்டில் இருந்து பெரிய குடம் எடுத்துகொண்டுவந்து எண்ணெயை பிடித்து சென்றார்கள். மேலும் சிலர் வாட்டர் கேனில் பிடித்துக்கொண்டு சென்ரறார்கள். ஆனால், அந்த எண்ணெய் சமையலுக்கு பயன்படாத எண்ணெய் உணவுப் பொருளாக பயன்படுத்த வேண்டாம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியாகி இருக்கும் அறிக்கையில் ” விபத்தில் சிக்கியடேங்கர் லாரியில் இருந்த இந்த சோயா ஆயிலை பிடித்து செல்வது போன்ற காணொலி சமூக ஊடகங்களில் பரவியது. விபத்தில் கசிவு ஏற்பட்டு வெளியேறிய சோயா ஆயிலானது சுத்திகரிக்கப்படாதது மற்றும் சமையலுக்கு பயன்படாத எண்ணெய் ஆகும். எனவே, இந்த சோயா ஆயிலை பொதுமக்கள் யாரும் உணவு பொருளாக பயன்படுத்த வேண்டாம் என நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.