நேஷன்ஸ் லீக் கால்பந்து: ஸ்பெயினை வீழ்த்தி கோப்பையை வென்ற போர்ச்சுகல்!
இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் போர்ச்சுகல் அணி வென்று அசத்தியுள்ளது.

பெர்லின் : 2024-25 நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நள்ளிரவு 12:30 மணிக்கு நடைபெற்றது. இந்தப் போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது, ஏனெனில் இரு அணிகளும் முன்னதாக இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவை. 2019ஆம் ஆண்டு போர்ச்சுகல் முதல் முறையாக கோப்பையை வென்றது, அதேபோல் 2023ஆம் ஆண்டு ஸ்பெயின் சாம்பியன் ஆனது. இந்த முறை, இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லப் போவது யார் என்று உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
அந்த காத்திருப்புக்கு ஏற்றது போல போட்டியின் வழக்கமான 90 நிமிட நேரத்தில், இரு அணிகளும் கடுமையாக மோதின. ஸ்பெயின் அணியின் மார்டின் ஸூபிமெண்டி மற்றும் மைக்கேல் ஒயார்ஸபால் ஆகியோர் அபாரமாக ஆடி, தங்கள் அணிக்காக இரண்டு கோல்கள் அடித்தனர். ஆனால், போர்ச்சுகல் அணி தோல்வியை ஏற்காமல் பதிலடி கொடுத்தது. நுனோ மெண்டஸ் ஒரு கோல் அடித்தார், பின்னர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றொரு கோல் போட்டு ஆட்டத்தை 2-2 என்ற சமநிலைக்கு கொண்டு வந்தார்.
இதனால், யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்க கூடுதல் நேரம் தேவைப்பட்டது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை, ஆட்டம் மீண்டும் சமநிலையில் முடிந்தது. இதையடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட்அவுட் நடத்தப்பட்டது. இதில், போர்ச்சுகல் அணியின் கோல்கீப்பர் டியோகோ கோஸ்டா, ஸ்பெயின் அணியின் ஆல்வாரோ மொராட்டாவின் பெனால்டி கிக்கை அற்புதமாகத் தடுத்து நிறுத்தினார்.
மறுபுறம், போர்ச்சுகல் அணியின் ரூபன் நெவ்ஸ் தனது பெனால்டி கிக்கை கோலாக மாற்ற, போர்ச்சுகல் 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், போர்ச்சுகல் அணி தனது இரண்டாவது நேஷன்ஸ் லீக் கோப்பையை (2019, 2025) வென்று வரலாறு படைத்தது.
அதே சமயம் இந்தத் தொடரில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற பெருமையையும் பெற்றது. கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தலைமையில், அணியின் ஒற்றுமையும், கடைசி நேரத்தில் கோஸ்டாவின் அற்புதமான செயல்பாடும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. ஸ்பெயின் அணி, தோல்வி அடைந்தாலும், இறுதிப் போட்டி வரை தங்கள் திறமையை வெளிப்படுத்தியது. எனவே இரண்டு அணிகளுக்கும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.