‘ஜூலை 7ம் தேதி பொறியியல் கலந்தாய்வு’ – அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14 தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை, அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தரவரிசை எண்ணை http://tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
அதன்படி, மொத்தம் 145 மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். தரவரிசைப் பட்டியலில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் கடலூர் மாணவி தாரணி முதலிடம் பிடித்துள்ளார். பொதுப் பிரிவில் காஞ்சி மாணவி சகஸ்ரா முதலிடம் பிடித்தார்.
தகுதிப் பட்டியலை வெளியிட்ட உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன், ‘சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையும், பொதுப் பிரிவினருக்கு ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரையும் நடக்கிறது’ என்று அறிவித்துள்ளார்.
மேலும், ‘ பொறியியல் சேர்க்கைக்கு சேர்ந்த 2,41,643 மாணவர்கள் தகுதிப் பட்டியலில் இருப்பதாகக் கூறினார். பொறியியல் கலந்தாய்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 425 0110 என்ற எண்ணில் அழைக்கலாம் என தெரிவிக்கப்படுள்ளது. தரவரிசைப் பட்டியல் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், மாணவர்கள் ஜூன் 28 முதல் ஜூலை 2 வரை குறை தீர்க்கும் பிரிவை அணுகலாம் எனவும் கூறினார்.