போலீஸ் அடித்ததில் அஜித்துக்கு சிறுநீரில் ரத்தம் வந்தது” நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
தண்ணீர் கொடுத்திருந்தால் அஜித் உயிரோடு இருந்திருப்பார் என அவருடைய நண்பரும் கோவில் ஊழியருமான வினோத் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகாரில் 2025 ஜூன் 27 அன்று காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக வெடித்துள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் (FIR), “அஜித்குமார் காவலர்களிடமிருந்து தப்ப முயன்றபோது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு இறந்தார்,” எனக் கூறப்பட்டது இந்த வழக்கில் மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், அவரது உடலில் 18 இடங்களில் கடுமையான வெளிப்புற காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் இந்த வழக்கை மேலும் பேசுபொருளாக வெடிக்க காரணமாகவும் அமைந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஏற்கனவே, ஐந்து காவலர்கள் ராஜா, சங்கரமணிக்கண்டன், ராமச்சந்திரன், பிரபு, ஆனந்த் கைது செய்யப்பட்டனர். அதைப்போல, மேலும் ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படியான பரபரப்பான சூழலில், சம்பவத்தை நேரில் பார்த்ததாக உயிரிழந்த அஜித்தின் நண்பரும் கோவிலின் ஊழியருமான வினோத் என்பவர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் பேசியதாவது ” கோவிலுக்கு வந்த அவர்கள் காரை பார்க் செய்துவிடுங்கள் என சாவியை அஜித்திடம் கொடுத்தார்கள். பிறகு அஜித் ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் சாவியை கொடுத்தார். திருப்பி வெளியே வரும்போது மற்றொரு ஆட்டிய டிரைவர் காரை எடுத்து வந்து நிறுத்தினார்.
பிறகு காரை பார்க் செய்ய சொன்ன அந்த அம்மா மதுரை சென்றுவிட்டார்கள். மதுரை போனவுடன் என்னுடைய நகையை காணவில்லை என கூறி புகார் அளித்தார். பிறகு அஜித்குமாரை இரவு முழுவதும் விசாரணை செய்தனர். விசாரணை முடிந்த பிறகு அடுத்து அவருடைய தம்பியை அழைத்து சென்றனர். பிறகு மதியம் 1,2 மணிக்கு எங்களை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
அதற்கு பிறகு தட்டாங்குளம் என்கிற ஒரு பகுதியில் சாப்பாடு வாங்கிட்டுவிட்டு தோப்பு ஒன்றுக்குள் அழைத்து சென்றனர். எங்களிடம் விசாரணை செய்துவிட்டு அடுத்ததாக அஜித்தை மட்டும் தனியாக அழைத்து சென்று விசாரணை செய்தனர். என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை உடனடியாக அவரை அடிக்க தொடங்கிவிட்டார்கள். விசாரணையின் போது அஜித்தின் வாயில் மிளகாய் பொடியை தட்டி கடுமையாக போலீஸ் தாக்குனார்கள். அவருக்கு விழுந்த அந்த அடியை என்னால் வார்த்தையால் சொல்ல முடியவில்லை படத்தில் கூட நான் அப்படி பார்த்தது இல்லை.
4 லிருந்து 5 முறை வாயில் மிளகாய் பொடியை கொட்டி தண்ணீர் கேட்க கேட்க கொடுக்காமல் அடித்தார்கள். இதனால் அடி தாங்க முடியாமல் அஜித்திற்கு வலிப்பு ஏற்பட்டது. யூரினில் ரத்தமும் வந்தது. கையில் போலீசார் இரும்பு கம்பிகளை கொடுத்தவுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால், ஒரு மாதிரி அப்போதே கிறங்கிவிட்டார்” எனவும் நேரில் பார்த்த வினோத் அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய வினோத் ” தண்ணீர் கொடுத்திருந்தால் உயிரோடு இருந்திருப்பார் என நினைக்கிறேன். தண்ணீர் கொடுக்காமல் மிளகாய் பொடி கொடுத்ததால் அடி தாங்க முடியாமல் அஜித் உயிரிழந்துவிட்டார்” எனவும் வினோத் வேதனையுடன் இந்த முக்கிய தகவலை பகிர்ந்தார்.