இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக ஆளுநர் செயல்பட்டுள்ளார்..அமைச்சரை நீக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை..! சபாநாயகர் அப்பாவு

அமைச்சர் செந்தில் பாலாஜிய நீக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிகாரம் இல்லை என முதல்வர் பேட்டி.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். நெஞ்சுவலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வரும் அவருக்கு, ஜூலை 12-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், செந்தில் பாலாஜி மீது ஊழல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அமலாக்கத்துறை விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்குவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் தெரிவித்துள்ளதற்கு கட்சி தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநருக்கு ஒரு அமைச்சரை நீக்கக்கூடிய அதிகாரம் கிடையாது என தெரிவித்துள்ளார்.
எனவே, அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு ஆளுநர் ரவிக்கு எந்த அதிகாரமும் இல்லை, அவ்வாறு போடப்பட்ட உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒருவரை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்றால், ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டால் அவரை பதவியில் இருந்து நீக்க முடியாது, அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவியில் இருந்து நீக்க முடியும் என்று கூறினார்.
ஆளுநரின் இந்த செயல் சிறுபிள்ளைத் தனமாக உள்ளது. செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. செய்திக்குறிப்பை மட்டுமே வைத்து எதையும் நடைமுறைப்படுத்தமுடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக ஆளுநர் ரவி செயல்பட்டுள்ளர் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
