சந்தி சிரிக்கும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு! – இபிஎஸ் கண்டனம்

காவல் துறையினரின் கையை கட்டும் நிர்வாக திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவித்த இபிஎஸ்.
தமிழ்நாட்டில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் தந்து சட்டப்படி செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எங்கெங்கும் காணினும் சக்தியடா என்று மகாகவி பாரதி பாடிய நம் தாய் திருநாட்டில், திமுகவின் அலங்கோல ஆட்சியில் எங்கெங்கு காணினும் குற்ற செயல்களாக இருப்பது வெட்கித் தலைகுனிய வைக்கிறது. ஒரு மாநிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் குற்றங்கள் நடப்பது இயற்கை.
மாநிலம் முழுவதும் குற்ற பூமியாக காட்சியளிப்பதும், அத்தகைய அராஜகங்களில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஈடுபடுவது என்பது தமிழகத்தில் நடக்கும் விந்தையாகும். கடந்த சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு, கத்தியால் வெட்டிக்கொலை, செல்போனுக்காக ஓடும் ரயிலில் பெண்ணை தள்ளிக் கொலை, சாலையில் செல்லும் பெண்களிடம் நகை வழிப்பறி என்று தொடர்ந்து பல நிகழ்வுகள் தமிழகத்தில் பல இடங்களில் நடந்தேறி வருகிறது.
இதன் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பின்மை கருதி வெளியில் செல்ல அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து, தமிழகத்தில் இதுபோன்ற அராஜகமான நிகழ்வுகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. கடந்த நடைபெற்ற குற்றங்களை பட்டியலிட்டு குற்றசாட்டியுள்ளார். திமுக அரசு பதவியேற்ற இந்த 26 மாதங்களாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் விற்பனை, முதியவர்கள் குறிவைத்து தாக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை பேட்டியின் வாயிலாகவும், அறிக்கைகளின் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் நான் எடுத்து வைத்து வருகிறேன்.
எனினும், திமுக அரசு பதவியேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. மக்களைக் காப்பாற்ற துப்பு இல்லாமல், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வக்கில்லாமல், காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சர், இனியாவது காவல் துறையை தனது ஏவல் துறையாக பயன்படுத்தாமல், காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்டப்படி செயல்பட அனுமதிக்க வேண்டுமென்று வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
சந்தி சிரிக்கும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு !
காவல் துறையினரின் கையை கட்டும் நிர்வாக திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனம் !
– மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. pic.twitter.com/8MvahTOtyh
— AIADMK (@AIADMKOfficial) July 10, 2023