இரு தரப்பு வாதங்களும் நிறைவு! ஜூலை 14ல் விசாரணை முடிக்கப்படும்.. செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு!

senthil balaji and ED

ஆட்கொணர்வு மனு மீது அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வழக்கு 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அமைச்சர் செந்தில் கைதை எதிர்த்து அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று இரண்டாவது நாளாக சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் முன்பு நடைபெற்றது. நேற்று செந்தில் பாலாஜி தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், இன்று அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார்.

அப்போது, தங்களிடம் உள்ள ஆதாரங்களை அமலாக்கத்துறை பட்டியலிட்டு வாதாடிய சொலிசிட்டர் துஷார் மேத்தா, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை. காவலில் எடுத்து விசாரிக்க சட்டத்தில் அனுமதி வழங்காவிட்டாலும், புலன் விசாரணை செய்வது கடமை. குற்றத்தை கண்டுபிடிக்க, சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை முடக்கம் செய்வது, சோதனை செய்வது, வழக்கு தாக்கல் செய்ய அதிகாரம் உள்ளது.

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரியதில் இருந்து, நீதிமன்ற காவலில் இருப்பதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். செந்தில் பாலாஜியை கைது செய்தபோது அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாக நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறியிருக்கிறார். செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக இரு நீதிபதிகளும் கூறவில்லை என வாதத்தை முன்வைத்தனர்.

மேலும், குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 41ஏ குறித்து இரு நீதிபதிகளுக்கும் கருத்து வேறுபாடு இல்லை. மூத்த நீதிபதி இதுபற்றி எதுவும் கூறவில்லை, எல்லா வழக்குகளிலும் 41ஏ பொருந்தாது. காவல்துறை அதிகாரி கைது செய்யவில்லை என்றால் 41ஏ நோட்டீஸ் கொடுக்கலாம், உரிய ஆதாரங்கள் இருந்தால் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டப்பிரிவு 19-ன் கீழ் கைது செய்யலாம். எனவே, மருத்துவமனையில் உள்ள காலத்தை நீதிமன்ற காவலில் இருப்பதாக கருதக்கூடாது எனவும் அமலாக்கத்துறை தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டது.

இதன்பின் காவலில் விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்? என அமலாக்கத்துறையிடம் நீதிபதி கார்த்திகேயன் எழுப்பிய கேள்விக்கு, உடல்நிலை பாதித்த செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து ஏதேனும் நிகழ்ந்தால் நாங்கள் பொறுப்பேற்க நேரிடும், எனவே நிபந்தனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடினோம். செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு (ஜூலை14) ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை தரப்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் நிறைவு பெற்றதை அடுத்து, விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார் 3வது நீதிபதி சிவி கார்த்திகேயன். மேலும், செந்தில் பாலாஜியின் ஆட்கொண்ர்வு மனு மீது ஜூலை 14ம் தேதி விசாரணை முடிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்