SanatanaDharma : சனாதனம் ஒழியும் வரை தனது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.! உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்.!

கடந்த வாரம் சனிக்கிழமை சனாதன ஒழிப்பு மாநாடு எனும் நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , சனாதனம் என்பது ஒழிக்கப்பட வேண்டியது தான். டெங்கு, கொரோனா போல சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும் என கூறி இருந்தார். இதற்கு பாஜக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. வட மாநிலங்களில் அமைச்சர் உதயநிதி மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அவரது கருத்தை வாபஸ் வாங்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வரும் நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். சனாதனம் குறித்து தான் பேசியது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என கூறி வருகிறார்.
சமீபத்தில் கூட அயோத்தி சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருவோருக்கு 10 கோடி ரூபாய் பரிசு என அறிவித்து சர்ச்சையை கிளப்பினார். ஆனால், என் தலையை சீவ 10 ரூபாய் சீப்பு போதும் என கலைஞர் கருணாநிதி பாணியில் விமர்சனத்தை வேடிக்கையாக எதிர்கொண்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இந்நிலையில், நேற்று நெல்லையில் திமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநித்திஷ் ஸ்டாலின், நான் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது ஒருநாள் செய்தியாக கடந்து போயிருக்கும். ஆனால் அதில் கூடுதல் பொய் செய்தி பரப்பி, இப்போது ஒட்டுமொத்த இந்தியாவே அதைப்பற்றி பேசும் வகையில் மாற்றி விட்டனர். எதையுமே கேள்வி கேட்கக்கூடாது, எல்லாமே நிலையானது என்பதுதான் சனாதன கொள்கை.
ஆனால், அனைத்தையும் கேள்வி கேட்போம் என்பதே நமது திராவிட முன்னேற்ற கழகம். அம்பேத்கர் சொன்னதையே நானும் சொன்னேன். பெரியார் எதற்காகப் போராடினாரோ அதை தான் நான் பேசினேன். திமுக எதற்காக துவங்கப்பட்டதோ அதற்காகவே நான் குரல் கொடுத்தேன். சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என்றேன். உடனே பாஜகவினர் என்னைப்பற்றி பொய் செய்தியைப் பரப்பினர்.
பாஜகவினர் வாயைத் திறந்தாலே பொய். நான் இனப்படுகொலை செய்யச் சொல்லிவிட்டேன் என பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். பிரதமர் மோடி வறுமையை ஒழிப்பேன் என பொய் கூறினாரே, வறுமையை ஒழிப்பது என்றால் ஊரில் இருக்கும் பணக்காரர்களை எல்லாம் அழைத்து கொலை செய்வதா? இந்த அறிவு கூட இல்லாத பாஜக தான், எனது பேச்சை திரித்து பரப்பி வருகிறது.
அமித்ஷா, நட்டா என இப்போது சனாதனம் பற்றி பேசாத ஆள் கிடையாது. இதற்கு மேல் நான் பேசப்போவது இல்லை, தமிழ்நாட்டு மக்கள் தான் பேச வேண்டும். நாம் கொள்கையைப் பேசும் கூட்டம். சனாதனம் ஒழியும் வரை என் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே தான் இருக்கும். நேற்று ஒரு சாமியார், உதயநிதி தலையை சீவினால் ரூ.10 கோடி என அறிவித்தார். என் தலையை சீவுவதற்கு ஏன்ப்பா 10 கோடி? 10 ரூபாய் சீப்பு போதும், நானே சீவிக்கிறேன் என்றேன்.
சாமியாரிடம் எப்படி 10 கோடி இருக்கும் என நான் கேட்டேன். அதை செய்தியாளர் ஒருவர் அந்த சாமியாரிடம் கேட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு 500 கோடியாம். சாமியாரிடம் 500 கோடி இருக்கிறது. இவரெல்லாம் உண்மையான சாமியாரா? இதுபோன்ற போலி சாமியார்களை அடித்து விரட்டத்தான் சனாதன ஒழிப்பை பற்றி பேசுகிறோம். இந்த 9 ஆண்டுகளில் பாஜக அரசு செய்த சாதனை என்று ஒன்றுமே இல்லை, அவர்கள் செய்வது முழுக்க முழுக்க கலவரத்தை தூண்டி விடுவது மட்டும் தான் என நேற்று நெல்லையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
TNPL : “மேடம் இது அவுட் இல்லை”…டென்ஷனாகிய அஸ்வின்!
June 9, 2025