இபிஎஸ் குறித்து பேச தனபாலுக்கு இடைக்கால தடை விதிப்பு – ஐகோர்ட் உத்தரவு

thanapal

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் சொல்லித்தான் எனது சகோதரர் கனகராஜ் சில காரியங்களை செய்ததாகவும், கனகராஜ் சகோதரர் தனபால் அண்மைய காலமாக செய்தியாளர் சந்திப்பின்போது கூறி வருகிறார். மேலும், எனது சகோதரர்  கொலை செய்யப்பட்டார் என்றும் கோடநாடு குறித்து வெளியில் பேச கூடாது என மிரட்டல் வருவதாக கூறி, எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பல்வேறு பரபரப்பான தகவலை தெரிவித்திருந்தார்.

இந்த சமயத்தில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி பேச கார் ஓட்டுநர் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனது செல்வாக்கை குறைக்கும் வகையில் தனபால் பேசி வருகிறார்.

கோடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ரூ.1.10 கோடி நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடக்கோரியும் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக வழக்கு தொடர எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச கனகராஜனின் சகோதரர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடக்கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தனபால் 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை அக்.10ம் தேதி ஒத்திவைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்