நாட்டின் புதிய எதிர்காலம் புதிய பாராளுமன்றத்தில் ஆரம்பித்துவிட்டது.! ரோஸ்கர் மேளாவில் பிரதமர் மோடி பேச்சு.!

இன்று நாடு முழுவதும் 46 இடங்களில் நடைபெறும் ரோஸ்கர் மேளாவில், பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு 51,000 பணி நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் வழங்கியுள்ளார். அவர்கள் அஞ்சல் துறை, அணுசக்தித் துறை, வருவாய்த் துறை, பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றுவார்கள்.
இந்த பணி நியமனக் கடிதங்களை வழங்கிய பிறகு பேசிய பிரதமர் மோடி, “புதிதாக பணியமர்த்தப்பட்ட பல பெண்களுக்கு இன்று நியமனக் கடிதங்கள் கிடைத்துள்ளன. பெண்கள் எப்போதும் புதிய ஆற்றலுடன் பல துறைகளில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். இன்று நமது நாடு வரலாற்று சாதனைகளையும், முடிவுகளையும் கண்டு வருகிறது.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா தற்போது இரு அவைகளிலும் சாதனை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டின் புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நாடு 2047-க்குள் வளர்ந்த இந்தியாவாக மாறத் தீர்மானித்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில், மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கப் போகிறோம்.”
“இந்த காலகட்டத்தில், ஒவ்வொரு அரசு ஊழியர்களும் பெரும் பங்கு வகிக்கப் போகிறார்கள். நீங்கள் எப்பொழுதும் நாட்டின் குடிமகன் என்ற மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும். தொழில்நுட்பத்துடன் வளர்ந்த தலைமுறையின் ஒரு பகுதி நீங்கள். உங்கள் பணிக் களத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்” என்றார்.
மேலும், “கடந்த 9 ஆண்டுகளில், எங்கள் திட்டங்கள் இன்னும் பெரிய இலக்குகளை அடைய வழி வகுத்துள்ளன. எங்கள் கொள்கைகள் புதிய மனநிலை, பணி முறை செயல்படுத்தல் மற்றும் வெகுஜன பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தவை. கடந்த ஒன்பது ஆண்டுகளில், தொழில்நுட்ப மாற்றம் எவ்வாறு நிர்வாகத்தை எளிதாக்கும் என்பதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.” என்று பிரதமர் மோடி கூறினார்