ஒடிசா : பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையின் போது ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் என்ற சோகமான செய்தி வெளியாகியுள்ளது. மேலும், 120-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ரத யாத்திரையைக் காண்பதற்காக, 'படா தண்டா' (Bada Danda) எனப்படும் பூரியின் பிரதான சாலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். ரத ஊர்வலம் சென்றுகொண்டிருந்தபோது, ஒரே இடத்தில் மக்கள் பெருமளவில் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். கூட்ட நெரிசலால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவியது.
நெரிசல் குறித்துத் தகவல் அறிந்ததும், பாதுகாப்புப் படையினர், தன்னார்வலர்கள் மற்றும் அவசரக்கால மீட்புக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவ முகாம்களில் முதலுதவி அளிக்கப்பட்டது. தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு உடனடியாக மாற்றப்பட்டனர். தற்போது பெரும்பாலானோரின் உடல்நிலை சீராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்றான ரத யாத்திரைக்கு நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். இந்த மாபெரும் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது நிர்வாகத்திற்கு எப்போதும் ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கூட்ட நெரிசலைக் குறைக்கக் கூடுதல் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், காவல்துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும், அதிக நெரிசல் உள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் பக்தர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
