பிரான்ஸ் நாட்டில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த விரைவில் தடை.!
கிழக்கு பிரான்சின் நோஜென்ட் நகரத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் 14 வயது மாணவர் ஒருவர் 31 வயது ஊழியரை கத்தியால் குத்திக் கொன்ற துயர சம்பவத்திற்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நோஜென்ட் : பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடுக்க விரைவில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான விதிகள் விரைவில் அமல்படுத்தப்படும் என அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.
வரும் மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியம் (EU) இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், பிரான்சே இந்த திசையில் கடுமையான சட்டங்களை இயற்றும் என்று அவர் கூறினார். கிழக்கு பிரான்சின் நோஜென்ட் நகரத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் 14 வயது மாணவர் ஒருவர் 31 வயது ஊழியரை கத்தியால் குத்திக் கொன்ற துயர சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, பிரான்ஸ் 2 தொலைக்காட்சி சேனலுக்கு ஜனாதிபதி மக்ரோன் அளித்த பேட்டியில், “15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை தடை செய்ய வேண்டும். இந்த திசையில் ஐரோப்பாவிலிருந்து முயற்சிகளை நான் எதிர்பார்க்கிறேன்.
இல்லையென்றால், பிரான்ஸ் தனியாக நடவடிக்கை எடுக்கும். இனியும் நாம் காத்திருக்க முடியாது” என்றார். இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் டிஜிட்டல் தளங்களுக்கான கட்டுப்பாடற்ற அணுகல் ஒரு முக்கிய காரணமாக மாறி வருவதாகவும் அவர் கூறினார்.
சமூக ஊடகங்களின் தீய விளைவுகள் குறித்து கடுமையாக நடந்து கொள்ளும் ஒரே நாடு பிரான்ஸ் மட்டுமல்ல. இதற்கு முன், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வயது சரிபார்ப்பு தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த விதியை அமல்படுத்துவதாக அந்நாட்டு அரசாங்கம் கூறியது.