விமான விபத்து நடந்த இடத்தில் ஆய்வு.., காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர்.!
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளான பகுதியில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அகமதாபாத் : நேற்றைய தினம் லண்டனுக்குச் சென்ற விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அகமதாபாத் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார். விபத்து நடந்த இடத்தில் நிலைமை குறித்து விளக்கப்பட்ட பிறகு, காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்றார்.
இதை தொடர்ந்து, விபத்தில் இறந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் மனைவி அஞ்சன்லிபென் ரூபானியையும் பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார்.விபத்து நடந்த இடத்தில் நிலைமையை பிரதமர் பார்வையிட்டபோது, அவருடன் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவும் இருந்தார்.