இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெளிவாக அறிவித்துள்ளது.

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு செய்தி பரவி கொண்டு இருந்தது. அது என்னவென்றால், வரும் ஜூலை 15-ஆம் தேதி முதல் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தீயாக பரவியது. இதனை பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி உண்மையா? என கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டார்கள்.
இதனையடுத்து. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெளிவாக அறிவித்துள்ளது.இதற்கு மறுப்பு தெரிவித்து, NHAI தனது அதிகாரப்பூர்வ X பதிவில், “இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கும் எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை. இது தவறான செய்தி,” என்று திட்டவட்டமாகக் கூறியது.
அதைப்போல, இந்த விவகாரத்தில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் தலையிட்டு, இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று உறுதிப்படுத்தினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “சில ஊடகங்கள் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கப்படும் என்று தவறாக செய்தி வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கப்படாது” எனவும் திட்டவட்டமாக அவரும் விளக்கம் அளித்தார்.
இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை என்றாலும், NHAI பிற வாகனங்களுக்கான சுங்கக் கட்டண முறைகளை மேம்படுத்தி வருகிறது. உதாரணமாக, ஆகஸ்ட் 15, 2025 முதல், தனியார் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கு 3,000 ரூபாய் மதிப்பிலான FASTag அடிப்படையிலான ஆண்டு சுங்கப் பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம், ஒரு வருடத்திற்கு 200 பயணங்களுக்கு அனுமதி அளிக்கிறது, ஆனால் இது இருசக்கர வாகனங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.