IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி குல்தீப் யாதவை எடுக்கவேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார்.

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜூன் 24 வரை லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை தொடர்ந்து அடுத்ததாக ஜூலை 2-ஆம் தேதி முதல் ஜூலை 6 வரை நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் விளையாட இந்தியா தயாராகி வருகிறது.
இந்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே ஹெடிங்லியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர், அணியின் பந்துவீச்சு வரிசையில் முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்து அணி 371 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டியதில், இந்திய அணியின் பந்துவீச்சு சற்று தடுமாறியது தெரிந்தது. எனவே, பந்துவீச்சை சரி செய்யவேண்டும் என்றால் அதில் சில மாற்றங்களை கொண்டுவரவேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் பேசும்போது “இந்திய அணி இன்னும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படவேண்டும் என்றால் என்னை பொறுத்தவரை பந்துவீச்சில் சில மாற்றங்களை கொண்டு வரவேண்டும். குல்தீப் யாதவ் மீண்டும் அணியில் இடம்பெற வேண்டும்.
அதைப்போல ஒருவரை இரண்டாவது போட்டியில் இருந்து நீக்கி அவருக்கு பதிலாக தான் குல்தீப் யாதவை கொண்டுவரவேண்டும். அவருடைய பெயரை சொல்வதற்காக நான் இந்த நேரத்தில் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். அவர் யார் என்றால் ஷர்துல் தாக்கூரை தான். அவரை தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக குல்தீப் யாதவை கொண்டுவரவேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.
இங்கிலாந்தில் வெயில் இன்னும் அதிகமாக வீசி சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது என்றால் நிச்சயமாக குல்தீப் யாதவ் அந்த நேரத்தில் சிறப்பாக வீசி விக்கெட்களை வீழ்த்துவார் என நான் நம்புகிறேன். எனவே, இரண்டாவது போட்டியில் நீங்கள் அணியில் எதாவது மாற்றங்கள் செய்ய விரும்புனீர்கள் என்றால் குல்தீப் யாதவை நான் கொண்டுவருவேன்” என தெரிவித்தார்.
மேலும், தொடர்ந்து அவர் இது குறித்து பேசுகையில் ” முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், மற்ற வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தத் தவறினர். பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அவரது எகானமி ரேட் 6.28 ஆக இருந்தது.
அப்படி இருந்தாலும் அவர் விக்கெட் எடுத்திருந்ததால் அவர் அடுத்த போட்டியில் விளையாடலாம். ஒரு காலத்தில் இந்தியா நியூசிலாந்து அல்லது இங்கிலாந்தில் கூட மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆடியது. குல்தீப் அணியில் இருந்தால், அவரை ஆட வைக்க வேண்டும்” எனவும் சஞ்சய் மஞ்ச்ரேகர் வலியுறுத்தி பேசினார்.