“10 நிமிஷம் லேட் அதுனால தப்பிச்சேன்”….விபத்தில் தப்பிய பெண் பேட்டி!
விபத்தான விமானத்தை 10 நிமிட தாமதத்தால் தவறவிட்ட குஜராத் பெண் கடவுள்தான் காப்பாற்றினார் என பேசியுள்ளார்.

அகமதாபாத் : அகமதாபாத் : நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளான சம்பவம்இந்தியாவையே மிகவும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதே சமயம், அதிர்ஷ்டவசமாக ஒருவர் சிக்கி உயிர்தப்பியதை போல இந்த விபத்தில் விமானத்தை தவறவிட்டு பலரும் உயிர்தப்பியிருக்கலாம் என கூறப்படுகிறது. அப்படி தான் குஜராத்தை சேர்ந்த பூமி சவுகான் கூட. இவர் ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசும்போது தன்னை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி என கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இந்த நேரத்தில் என்னுடைய மன நிலையில் நான் என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்கிறேன்.
ஏனென்றால், என்னால் அதனை எப்படி சொல்ல முடியும் என்று கூட தெரியவில்லை. அந்த அளவுக்கு மிகவும் எமோஷனலாக இருக்கிறேன். நான் நேசிக்கும் கடவுள் என்னை காப்பாற்றிவிட்டார். என்னுடைய கணபதி காப்பாற்றிவிட்டார். இந்த சம்பவத்தை பார்த்ததில் இருந்து இன்னும் வரை என்னுடைய உடல்களில் நடுக்கம் நிற்கவில்லை. அந்த அளவுக்கு நடுங்கிக்கொண்டு இருக்கிறது. விமானத்தை தவறவிட்ட பிறகு நான் ரொம்பவே கெஞ்சி பார்த்தேன். ஆனால், அவர்கள் என்னை ஏற்றவில்லை.
பிறகு விமானம் கிழம்பியவுடன் நானும் கிளம்பினேன். சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்திற்குள்ளாகியிருக்கிறது. வீட்டிற்கு சென்று நான் செய்தியை பார்த்த பிறகு தான் அதே விமானம் என்பதை உறுதி செய்தேன். உயிரிழப்பு எண்ணிக்கை பற்றி தகவல் தெரிந்தவுடன் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இன்னும் எனக்கு வேதனையாக இருக்கிறது. எப்படி நான் காப்பாற்றப்பட்டேன் என்பது புரியவில்லை. ஆனால், என்றைக்கும் கடவுளுக்கு நன்றி சொல்வேன்” எனவும் பூமி சவுகான் தெரிவித்தார்.