விமான விபத்து : 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் -ஏர் இந்தியா விளக்கம்!
அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 825 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

அகமதாபாத் : விமான நிலையத்திற்கு அருகே நடந்த எயர் இந்தியா விமான விபத்தில், 242 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா கேம்ப் மற்றும் ஐ.ஜி.பி. காம்பவுண்ட் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான பரபரப்பான செய்திதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி கரும்புகையால் சூழ்ந்துள்ளது.
தீயணைக்கும் பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன, மேலும் தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF), தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருகின்றன எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இப்படியான பரபரப்பான சூழலில் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தி ஏர் இந்தியா நடந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்ட விளக்கத்தில் ” அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் செல்லும் AI171 விமானம் இன்று புறப்பட்ட பிறகு விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது.
அகமதாபாத்தில் இருந்து மதியம் 13.38 (1.38) மணிக்கு புறப்பட்ட இந்த போயிங் 787-8 விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டவர்கள். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் தகவல்களை வழங்க 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்ணையும் நாங்கள் அமைத்துள்ளோம். இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஏர் இந்தியா முழு ஒத்துழைப்பையும் அளிக்கிறது. ஊடகங்கள் தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு, அவர்கள் ஏர் இந்தியாவின் ஊடகத் தொடர்பு எண்ணை +91 9821414954 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” எனவும் ஏர் இந்தியா தரப்பு கூறியுள்ளது.
Air India confirms that flight AI171, from Ahmedabad to London Gatwick, was involved in an accident today after take-off.
The flight, which departed from Ahmedabad at 1338 hrs, was carrying 242 passengers and crew members on board the Boeing 787-8 aircraft. Of these, 169 are…
— Air India (@airindia) June 12, 2025