“ஏர் இந்தியா விமான விபத்துக்கு முழு பொறுப்பேற்கிறோம்”..டாடா தலைவர் சந்திரசேகரன் வேதனை!
ஏர் இந்தியா விமான விபத்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் உறுதியளித்துள்ளார்.

அகமதாபாத் : நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளான சம்பவம்இந்தியாவையே மிகவும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விமான விபத்து தொடர்பாக டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் “ஏர் இந்தியா விமான விபத்துக்கு முழு பொறுப்பேற்கிறோம்” என வேதனையுடன் அறிக்கை ஒன்றை வெளியீட்டு இருக்கிறார். அறிக்கையில் அவர் கூறியதாவது ” ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்-லண்டன் காட்விக் விமானமான ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதை உறுதிப்படுத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்த விசாரணைக்கு இந்தியா, இங்கிலாந்து, மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்துள்ள விசாரணைக் குழுக்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும், விசாரணை முடிவுகள் குறித்து முழு வெளிப்படைத்தன்மையுடன் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். “இந்த துயரத்திற்கு என்ன காரணம் என்பதை அறிய நாமும் ஆர்வமாக உள்ளோம். உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகளைப் பகிர்ந்து கொள்வோம்,” என்று கூறியுள்ளார்.
ஏர் இந்தியா விமான விபத்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம். டாடா குழுமம் மிகவும் தீவிரமாக இந்த விஷயத்தை கையாண்டு வருகிறது. மேலும், டாடா குழுமம் தனது பொறுப்புகளை விட்டு விலக மாட்டாது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.