சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!
சாலையோரமாக இருந்த சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் ஒரு ஆம்னி வேன் நிலைதடுமாறி விழுந்து மூழ்கியது.

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
வேனில் 8 பேர் சென்ற நிலையில், இதில் 3 பேர் விபத்து நடந்தவுடன் வேனில் இருந்து வெளியேறி பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் 5 பேர் வேனுடன் கிணற்றுக்குள் மூழ்கினர். அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
உடனடியாக தீயணைப்புத் துறை, காவல்துறையுடன் உள்ளூர் மக்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கிணறு ஆழமாக இருந்ததாலும் அடியில் சக்தியாக இருந்ததாலும் மீட்பு பணி சவாலாக இருந்தது. முதலில், ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் கிரேன் மூலம் வேனை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், இந்த முயற்சிகள் நான்கு முறை தோல்வியடைந்தன.
பின்னர், 4 மணி நேர போராட்டத்துக்கு பின் கிரேன் மூலம் வேன் மீட்கப்பட்டது. வேனில் இருந்து பெண் உள்பட 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர், இதில் ஒரு ஒன்றரை வயது குழந்தையும் அடங்குவார். இறுதியில், மீட்கப்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தற்பொழுது, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம்-2 கிராமத்தில் இன்று கிணற்றில் விழுந்த ஐந்து நபர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும்ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3லட்சம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, கரூரில் ஆம்னி பஸ் – சுற்றுலா வேன் மோதி சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த கோர விபத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.