“இது வெஸ்ட் இண்டீஸ் போகாத”…ரோஹித் எச்சரிக்கையை மீறி சென்ற புஜாராவுக்கு நடந்த மர்ம சம்பவம்?
ரோகித் சர்மா பேச்சை கேட்காமல் சென்று 11 மணிக்கு வெஸ்ட் இண்டீஸில் புஜார மர்ம கும்பல் ஒன்றிடம் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

சென்னை : 2012-ல் இந்தியா A கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்தபோது, வீரர் செட்டேஷ்வர் புஜாராவுக்கு ஒரு பரபரப்பான சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தை பற்றி புஜாராவின் மனைவி பூஜாவின் ‘The Diary of a Cricketer’s Wife” புத்தக வெளியீட்டு விழாவில், இந்தியாவின் கேப்டன் ரோஹித் ஷர்மா நகைச்சுவையாகப் பேசினார்.
அந்த விழாவில் கலந்து கொண்ட ரோஹித், “2012-ல் வெஸ்ட் இண்டீஸில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது, அதைப் புத்தகத்தில் எழுதினீர்களா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். உடனே அங்கிருந்தவர்கள் ரோஹித் எதை சொல்கிறார் என்பது போல யோசித்தார்கள். அதன்பின் அவர் கேட்ட கேள்விக்கு புஜாரா பதிலளிக்கையில், “நான் முழு விவரங்களை யாரிடமும் சொல்லவில்லை. என் மனைவிக்கு கொஞ்சம் தெரியும், ஆனால் முழு கதையும் தெரியாது,” என்று சிரித்தபடி கூறினார்.
உணவு தேடி சென்ற புஜாரா
புஜாரா சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர். எனவே, ஒரு நாள் இரவு 11 மணிக்கு, வெஸ்ட் இண்டீஸின் திரினிடாட் மற்றும் டொபாகோவில் சைவ உணவு தேடி வெளியே சென்றார். “நாங்கள் உணவு தேடினோம், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. திரும்பி வரும்போது, நான் ஒரு கும்பலிடம் தனியாக மாட்டிக்கொண்டேன்,” என்று விழாவில் புஜாரா கூறினார். அந்த கும்பலிடம் சிக்கியது அவருக்கு பயமாக இருந்தது. ஆனால், “அதற்கு பிறகு என்ன நடந்தது என்று என்னால் சொல்ல முடியாது,” என்று அவர் மர்மமாக முடித்தார்.
ரோஹித்தின் எச்சரிக்கையை மீறிய புஜாரா
புஜாரா சொன்னதை கேட்ட ரோஹித் ஷர்மா இதைப் பற்றி சிரித்தபடி, “நாங்கள் புஜாராவை எச்சரித்தோம். வெஸ்ட் இண்டீஸில் இரவு 9 மணிக்கு மேல் வெளியே செல்வது ஆபத்து என்று சொன்னோம்,” என்றார். ஆனால், புஜாரா தனது சைவ உணவு தேடலுக்காக பிடிவாதமாக வெளியே சென்றுவிட்டார். “புஜாராவின் பிடிவாதம் தான் அவரை இந்த சிக்கலில் மாட்டவைத்தது,” என்று ரோஹித் கிண்டலாக கூறினார்.
புஜாராவின் இந்த வெஸ்ட் இண்டீஸ் அனுபவம் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் முழுவதுமாக சொல்லவில்லை என்கிற காரணத்தால் என்ன நடந்தது என சமூக வலைத்தளங்களில் கேள்விகளையும் எழுப்ப தொடங்கிவிட்டார்கள்.