ஜூன் 24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!
இந்தக் கூட்டம் முக்கியமாக 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்துவதற்காகவும், உள்ளூர் அளவில் கட்சி அமைப்பை வலுப்படுத்துவதற்காகவும் நடத்தப்படுகிறது.

சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக செயல்படும் 82 மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், அதிமுக தனது கட்சி அமைப்பை வலுப்படுத்தவும், தொண்டர்களை திரட்டவும் தொடர்ந்து மாவட்ட அளவிலான கூட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கழக வளர்ச்சி பணிகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
பூத் கமிட்டி அமைப்பு, கட்சி வளர்ச்சி, மற்றும் தேர்தல் உத்திகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெறவுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான “எம்.ஜி.ஆர். மாளிகையில்”நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைமைக் கழகச் செயலாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.