இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒரே வார்த்தை தான் என மதுரையில் செய்தியாளர் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அவர் கூறுகையில், இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒரே வார்த்தை தான். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாரத் என்ற பெயர்தான் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்தியாவில் புதிதாக எந்த பெயரும் வைக்கவில்லை, அரசியல் சட்டத்தில் உள்ளது தான் கொண்டுவரப்பட்டுள்ளது.
பாரதம் என்ற வார்த்தை நம்ம கலாசாரத்தை மிகவும் ஆழமாக, தெளிவாக காட்டுக்கிறது. பாரத் என்று ஜி20 மாநாடு, குடியரசு தலைவர் விருந்து உள்ளிட்டவற்றில் பிரதமர் மோடி பயன்படுத்தி உள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டு வரப்பட்டுள்ள முக்கியமான திட்டங்களில் பாரத் என்ற வார்த்தை உள்ளது. பாரத் என்ற வார்த்தை காலம் காலமாக புத்தகத்தில் பார்த்து வருகிறோம். நாங்கள் (இந்தியா) கூட்டணிக்கு பெயர் வைத்தது காரணமாக பெயரை மாற்றுகிறார்கள் என கூறுகின்றனர் என பெயர் மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
இதையடுத்து, சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு உத்தரபிரதேசம் சாமியார் ஒருவர் விலை வைத்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, அமைச்சர் உதயநிதி தலைக்கு விலை வைத்தது பெரிய தவறு. அப்படி வைப்பவர்கள் போலி சாமியார்களாக இருப்பார்கள். அப்படி விலை வைத்தவர்கள் சனாதனத்தை பின்பற்றாதவர்களாக இருப்பார்கள். இன்னொருவருடைய உயிரை எடுப்பதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை, நம்ம ஒன்றும் கடவுள் இல்லை, யாருக்கும் அந்த உரிமை கிடையாது.
இதனால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை வைத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது ஏற்புடையதல்ல என கூறினார். மேலும், உதயநிதி அரசியலுக்கு வந்த பிறகு பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி மிகவும் அதிகம் என்றும் குடும்ப அரசியல் என்று நாங்கள் சொல்வது ஒவ்வொரு நாளும் உண்மை என நிரூபணம் ஆகி வருகிறது எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இவ்வாறு தெரிவித்தார்.
