கோவை கல்யாண் ஜூவல்லரியில் உள்ள 51 ஊழியர்களுக்கு கொரோனா.!

கோவையில் உள்ள கல்யாண் ஜூவல்லரியில் பணிபுரியும் 51 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த ஜூவல்லரியிலயன் மேலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கோவையில் 100 அடி சாலையில் உள்ள கல்யாண் ஜூவல்லரியில் பணிபுரியும் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த ஜூவல்லரி கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.
அதனையடுத்து அந்த ஜூவல்லரியில் பணிபுரியும் 90 ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் கோவையில் உள்ள அரசு மருத்துவமனை, இவர். எஸ். ஐ. மருத்துவமனை, கொடிசியா வளாகம், கற்பகம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே கடையில் வேலை பார்த்து வந்த 51 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், கடந்த ஒரு வாரமாக அந்த நகை கடைக்கு சென்று வந்தவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையிலோ அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலோ சென்று கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்ய வேண்டும் என்று சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், சுகாதார துறையினர் அந்த ஜூவல்லரி நிர்வாகம் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்ததற்காக புகார் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர்அந்த ஜூவல்லரியின் மேலாளர்களான விஜயகுமார் மற்றும் விபின் ஆகிய இருவரும் இரு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.