TNGOVT: இனி பத்திரப்பதிவில் சொத்தின் படத்தையும் இணைக்க வேண்டும்.. தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும்போது சொத்தின் புகைப்படங்களை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படமும் ஆவணமாக இணைக்க வேண்டும் என பதிவுத்துறை தலைவருக்கு ஆணையிட்டுள்ளது.
காலி மனையை ஜியோ கோ – ஆர்டினேட்ஸோடு புகைப்படம் எடுத்து ஆவணமாக இணைக்க வேண்டும் என கடந்த வாரம் அறிவுரை வழங்கப்பட்டது. சொத்தின் பக்கத்தில் இருக்கும் காலி இடத்தை புகைப்படம் எடுத்து ஆவணமாக சேர்த்து மோசடி செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், இனி பத்திரப்பதிவில் சொத்தின் புகைபடத்தையும் இணைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பதிவுத்துறையில் போலி ஆவணங்கள் பதியப்படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என பதியப்படுவதால் ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் வழிகாட்டுதல்கள் பதிவுத்துறை தலைவரால் தனியே வழங்கப்படும் எனவும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.