”அனைவரும் யோகாசனம் செய்வோம்” – அண்ணாமலை அழைப்பு.!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை யோகா பயிற்சி மேற்கொண்டார்.

சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிக்குப் பிறகு, ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா சபை அறிவித்தது. அன்றாட வாழ்வில் யோகாவை சேர்ப்பதால் மனம் மற்றும் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.
இன்று (ஜூன் 21) சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சிகளை இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் அமைப்பு (ICCR) இதை நடத்துகிறது. அதன்படி, ஆந்திராவின் விசாகப்பட்டினம் கடற்கரையில் பொதுமக்களுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி
யோகா செய்தார்.
அந்த வகையில், முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், ”சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்றைய தினம் எனது இல்லத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டதில் மகிழ்ச்சி. யோகா பயிற்சிகள், உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நல்வாழ்வை மேம்படுத்துவதை , உலக நாடுகள் உணர்ந்து வருகின்றன.
உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளில், மக்கள் பலரும் யோகாவை தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர். யோகா பயிற்சி செய்வது வழக்கமான உடற்பயிற்சியைத் தாண்டி, உடல் மற்றும் மன நல்வாழ்வை மேம்படுத்துவதோடு, சுவாசத்தை சீரமைப்பது, மன அழுத்தத்தைக் குறைப்பது என, அன்றாட வாழ்வை மேம்படுத்துகிறது. அனைவரும் யோகாசனம் செய்வோம். நமது உடலையும், உள்ளத்தையும் மேம்படுத்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்றைய தினம் எனது இல்லத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டதில் மகிழ்ச்சி.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் முயற்சியால், கடந்த 2014 ஆம் ஆண்டு ஐநா சபை, நமது பாரத நாட்டின் அடையாளங்களில் ஒன்றான யோகாசனத்தை அங்கீகரித்து, ஆண்டுதோறும்… pic.twitter.com/Js0XcDEXkl
— K.Annamalai (@annamalai_k) June 21, 2025