இஸ்ரேல் உளவு சேவைகளுடன் தொடர்பு.., ஈரானில் 22 பேர் கைது.!
இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக 22 பேர் கைது செய்யப்பட்டனர் என்று ஈரான் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானின் கோம் மாகாண போலீசார் இன்று தகவல் தெரிவித்ததாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் அளித்த தகவலின்படி, சியோனிச ஆட்சியின் உளவு சேவைகளுடன் தொடர்புடையவர்கள், பொதுமக்களின் கருத்தை தொந்தரவு செய்தவர்கள் மற்றும் குற்றவியல் ஆட்சியை ஆதரித்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 22 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகவும், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்ட 24 பேரை வியாழக்கிழமை ஈரானிய போலீசார் கைது செய்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து இது நடந்ததாக தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவு பார்த்ததற்காக ஒரு ஐரோப்பிய நாட்டவரும் கைது செய்யப்பட்டதாக ஈரான் காவல் படையுடன் தொடர்புடைய அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தஸ்னிம் நேற்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லது கைது செய்யப்பட்ட தேதியைக் குறிப்பிடவில்லை.
இதனிடையே, நாடு முழுவதும் குறைந்தது 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நார்வேயை தளமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பான ஈரான் மனித உரிமைகள் தெரிவித்துள்ளது.