மதுரை ரயில் விபத்து: சதி வேலையா?.. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு – தெற்கு ரயில்வே ADGP பேட்டி!

மதுரை ரயில் நிலையம் அருகே மற்றொரு ரயிலுடன் இணைக்க நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் திடீரென இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதில், 9 பேர் உயிரிழந்தனர். உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென் இந்தியா நோக்கி சிறப்பு ரயிலில் ஆன்மீக யாத்திரையாக 64 பேர் பயணித்துள்ளனர். மதுரை, ராமேஸ்வரம் பகுதியில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில், ரயில் பயணித்த பயணிகள் எடுத்து வந்த சமையல் சிலிண்டர் வெடித்தது காரணமாக இரண்டு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், மதுரையில் தீ விபத்து ஏற்பட்டு ரயில் பெட்டி எரிந்த இடத்தில் ரயில்வே ADGP வனிதா ஆய்வு மேற்கொண்டார்.
தீ விபத்துக்குள்ளான ரயில் பெட்டியின் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சதி வேலைகளுக்கான சாத்தியம் ஏதும் இல்லை. ரயில் பெட்டியில் சிலிண்டர் அடுப்பில் தேநீர் போட்டு கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், அடுப்பு எரிப்பதற்காக விறகுகள், கரி உள்ளிட்டவை ரயில் பெட்டியில் இருந்தன. இருப்பினும், ரயில் பெட்டி தனியாக நிறுத்தப்பட்டிருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றார்.
ரயில் பேட்டி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கியது. பிரேத பரிசோதனை முடிந்தவுடன் 9 பேரின் உடல்கள் சென்னை கொண்டுவரப்பட்டு, விமானம் மூலம் உத்தரபிரதேச மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், பயணத்துக்கு ஏற்பாடு செய்த சுற்றுலா ஏற்பாட்டாளரை வழக்கில் சேர்த்துள்ளோம். சுற்றுலா ஏற்பாட்டாளரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விபத்தில் இறந்த 9 பேரில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளன என கூறினார்.