“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!
வேலூரில் சர்வதேச யோகா தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான நமீதா பங்கேற்று இவ்வாறு பேசியிருக்கிறார் .

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆளுநர் விருட்சசனம், புஜங்காசனம் மற்றும் தனுரசசனம் உள்ளிட்ட யோகா ஆசனங்களைச் செய்தார்.
அந்த வகையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம், காக்கா தோப்பு பகுதியில் உள்ள அதி நர்சிங் கல்லூரியில் நடந்த சிறப்பு யோகா பயிற்சியில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமீதா பங்கேற்றார். மேலும், அவருடன் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் பங்கேற்றார்.
யோகா பயிற்சியினை செய்து முடித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நமீதா, “யோகா என்பது புதியது என்று மக்கள் நினைக்கிறார்கள், அதனால்தான் ஜூன் 21 ஆம் தேதி யோகா தினமாகக் கொண்டாடுகிறோம். ஆனால் இது ஐந்தாயிரம் ஆண்டு பழமையான பாரம்பரியம், அதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். நான் அதைப் பின்பற்றப் போகிறேன் என்று முடிவு செய்துள்ளேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”என் குழந்தைகளிடம் நான் இன்றுவரை ஆங்கிலத்தில் பேசமாட்டேன். அவர்களுக்கு தமிழ், தெலுங்கு, குஜராத்திதான் தெரியும். ஏனெனில் அவையே அவர்களின் தாய்மொழி. ஆங்கிலத்தை டிவியிலோ, அல்லது வேறு எங்கோவோ அவர்கள் கற்றுக் கொள்ளட்டும்”’ என்று கூறியதோடு, ”என் குழந்தைகளுக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் தெரியாது.’ஜெய் ஹனுமான்’தான் கண்டிப்பாக தெரியும் என்பதை பெருமையாக சொல்வேன்” என்று கூறினார்.