ஸ்வாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் மரணமடைந்த ராம்குமார் – சிறை அதிகாரிகள் ஆஜர்!

Prison officials have appeared before the state Human Rights Commission for the case of Ram Kumar, who was arrested in the Swati murder case and died in jail.

ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் மரணமடைந்த ராம் குமார் குறித்த வழக்கிற்காக மாநில மனித உரிமை ஆணையத்தில் சிறைத்துறை அதிகாரிகள் ஆஜராகியுள்ளனர்.

சென்னையை சேர்ந்த பொறியாளர் ஸ்வாதி கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக அவரை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்த நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தினை சேர்ந்த பரமசிவம் என்பவரது மகன் ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறையிலேயே மின் வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராம்குமாரின் மரணம் தொடர்பாக வெளியாகிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இது குறித்து வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் இந்த வழக்கில் புழல் சிறை அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தற்பொழுது ராம்குமார் மரணம் குறித்த விசாரணைக்கு ஆஜராகியுள்ள சிறை கண்காணிப்பாளர் அன்பழகன், ஜெயிலர் ஜெயராமன், சிறைக்காவலர் பேச்சிமுத்து ஆகிய 3 சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.