மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!
முரசொலி மாறன் குடும்பத்திற்கு சொந்தமான சன் குழுமத்திற்குள் பூசல் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக எம்.பி. தயாநிதி மாறன் தனது அண்ணன் கலாநிதி மாறனுக்கு சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சன் டிவி பங்கு தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கலாநிதிக்கு தயாநிதி நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், இப்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் உரிமையாளர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஆம், சகோதரர் கலாநிதி மாறன், காவிரி உள்பட 7 பேருக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியதை மணி கன்ட்ரோல்.காம் என்கிற வணிக செய்தி ஊடகம் வெளியிட்டுள்ளது. கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் அனுப்பும் 2வது நோட்டீஸ் இது எனவும் குறிப்பிட்டுள்ளது. வழக்கறிஞர் சுரேஷ் என்பவர் மூலமாக இந்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத பண பரிவர்த்தனைகளில் கலாநிதியின் நிறுவனம் ஈடுபட்டதாகவும் தயாநிதி மாறன் குற்றச்சாட்டியுள்ளார். சன் டிவி பங்குகளை கையாளுவது 2003ஆம் ஆண்டு இருந்த நிலைக்கு மீட்டெடுக்க நோட்டீஸில் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலமாக மாறன் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
சன் டிவி நெட்வொர்க் இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்று. இது தமிழ்நாட்டின் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராகவும், முக்கிய பங்குதாரராகவும் கலாநிதி மாறன் உள்ளார். கலாநிதி மாறனின் தம்பி தயாநிதி மாறன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முக்கிய உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போது சென்னை மத்திய தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.
சன் டிவி நிறுவனம் ஆரம்பத்தில் மாறன் குடும்பத்தினரால் நிறுவப்பட்டது. ஆனால், காலப்போக்கில் குடும்ப உறுப்பினர்களிடையே பங்கு வைத்திருப்பது மற்றும் நிறுவனத்தின் கட்டுப்பாடு தொடர்பாக மோதல்கள் ஏற்பட்டுள்ளன, இந்த மோதல்கள் தற்போது சட்டரீதியான பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த பிரச்சினை மாறன் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல், திமுகவிற்கும் அரசியல் ரீதியாக உள்ள தாக்கத்தை ஏற்படுத்தலாம்.