சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!
சிரிய தலைநகர் தேவாலயத்தில் நேற்றைய தினம் நடந்து கொண்டிருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒரு பயங்கரமான தற்கொலை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளது. தேவாலயத்திற்குள் நுழைந்த ஒருவர் வெடிகுண்டு பெல்ட்டை வெடிக்கச் செய்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர், 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சிரியாவில் ஒரு வழிபாட்டுத் தலத்தின் மீது நடந்த மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இந்த தாக்குதலுக்கும் ISIS அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
சிரிய பாதுகாப்பு வட்டாரங்களின்படி, தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர் முதலில் தேவாலயத்திற்குள் நுழைந்து, கூட்டத்தை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் வெடிகுண்டு ஜாக்கெட்டால் தன்னை வெடிக்கச் செய்தார்.
இந்த பயங்கரவாத தாக்குதலை சிரியாவின் தகவல் அமைச்சர் டாக்டர் ஹம்சா அல்-முஸ்தபா கடுமையாகக் கண்டித்துள்ளார். துவைலாவில் உள்ள தேவாலயத்தில் நடந்த இந்த பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் கடுமையாகக் கண்டிப்பதாகவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இந்தக் கோழைத்தனமான செயல் நமது சிவில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ மதிப்புகளுக்கு எதிரானது. சிரிய சமூகம் தேசிய ஒற்றுமை மற்றும் சிவில் அமைதியை நம்புகிறது என்றும், அனைத்து சமூகங்களுக்கிடையில் சகோதரத்துவத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது’ என்றும் அவர் கூறினார்.