கோவிஷீல்ட் , கோவாக்சின் – அரசின் ஒப்புதல் பெற்ற பின் விரைவில் பொது மக்களுக்கு தடுப்பூசி!

கோவிஷீல்ட் , கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கும் அரசாங்கம் ஒப்புதல் கையெழுத்து அளித்து விட்டால் அடுத்த வாரமே பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருட காலமாக மக்கள் பல கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் நாளுக்கு நாள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் பல நாடுகளிலுள்ள ஆய்வுக்கூடங்களில் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சில வெற்றியடைந்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் தற்போது இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இந்த தடுப்பூசிகளுக்கு அவசர காலத்திற்கு பயன்பாட்டிற்கு அரசாங்கம் தற்போது அனுமதி கொடுத்து உள்ளது.
இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த இரு தடுப்பூசி நிறுவனங்களுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஒப்பந்தத்தில் அரசாங்கத்தால் கையெழுத்திடப்பட்ட பின்பு விரைவில் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி போடப்படும் எனவும், ஏற்கனவே தடுப்பூசி விநியோகம் செய்வதற்கான டிஜிட்டல் தளமாகிய கோவின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்பொழுது தடுப்பூசி போடுவதற்கான மையங்கள் பல இடங்களில் உருவாக்கப்பட்டு கொண்டிருப்பதாகவும், டெல்லியில் தடுப்பூசி மையங்கள் அமைப்பதற்கான பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல்கட்டமாக 500 முதல் 600 மையங்கள் வரை அமைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.