பிரிஜ் பூஷன் மீது இன்றே வழக்குப் பதிவு.. 7 மல்யுத்த வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனு!

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளை செய்வதாக பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, புகார் அளித்த நிலையிலும் FIR பதிவு செய்யாமல் இருப்பதாக கூறப்பட்டது. இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கூறி மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த சமயத்தில், எஃப்ஐஆர் பதிவு செய்யத் தவறிய டெல்லி காவல்துறை மற்றும் 3 மாதங்கள் ஆகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்து பல பிரபலங்கள் ஆதரவையும், தங்களது கருத்தையும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை உறுதி அளித்துள்ளது. பாலியல் தொல்லை தொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மல்யுத்த வீராங்கனைகள் 7 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில், அவர் மீது இன்றே வழக்குப்பதிவு செய்யப்படும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.