கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிமுகம்.! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!

கர்நாடாகாவில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகா தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் 134 தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக்கை விட 59,709 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் பெரும்பாண்மையான வாக்குகளில் முன்னிலையில் இருக்கும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.