மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!
18 வது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை மே 30 வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றமான அரசியல் சூழலுக்கு மத்தியில் தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மே 10, 2025 அன்று அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து மீண்டும் எப்போது ஐபிஎல் தொடங்கும் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது.
இந்த சூழலில் அப்படியான கேள்விகளுக்கும் விளக்கம் கிடைக்கும் வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குவதற்கான வேளைகளில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களை பிசிசிஐ தேர்ந்தெடுத்துள்ளது. அது மட்டுமின்றி வரும் மே 16-ஆம் தேதி முதல் மீண்டும் ஐபிஎல் போட்டியை தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
புதிய அட்டவணை இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அனைத்து அணிகளும் செவ்வாய்க்கிழமைக்குள் அவரவர் உள்ளூர் மைதானங்களுக்கு திரும்புமாறும் பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது. பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழு உறுப்பினர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பினர். இந்நிலையில், பிசிசிஐ அனைத்து அணிகளையும் தங்கள் வெளிநாட்டு வீரர்களின் பயண ஏற்பாடுகளை புதுப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொங்கப்படவுள்ளது குறித்து பிசிசிஐக்கு நெருக்கமாக இருக்கும் நபர் ஒருவர் பேசுகையில் ” ஐபிஎல் ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டதால், இறுதிப்போட்டி மே 25க்கு பதிலாக மே 30 அன்று நடைபெற வாய்ப்புள்ளது. புதிய அட்டவணை நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும்” என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவரை தொடர்ந்து ஐபிஎல் தலைவர் அருண் துமால் பேசுகையில் ” போர் நிறுத்தம் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஐபிஎல்-ஐ மீண்டும் தொடங்கி முடிப்பதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கி அதற்கான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.இதை உடனடியாக நடத்த முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். மைதானங்கள், தேதிகள் மற்றும் பிற விவரங்களை நாங்கள் முதலில் உறுதி செய்ய வேண்டும். இதில் முக்கியமாக இந்திய அரசாங்கத்துடன் ஆலோசனை நடத்த வேண்டும்” எனவும் அருண் துமால் தெரிவித்துள்ளார். இதனை வைத்து பார்க்கையில் விரைவாகவே ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.