ரயில் விபத்து செய்தி… மிகவும் வருத்தமடைந்துள்ளேன்.! ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இரங்கல்.!

ஒடிசா ரயில் விபத்து குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா.
ஒடிசா மாநிலத்தில் பாலசோர் மாவட்டத்தில் மேற்றிரவு நேர்ந்த ரயில் விபத்தில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய 900க்கும் அதிகமானோருக்கு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உள்நாட்டு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஒடிசா ரயில் விபத்து குறித்து ஜப்பான் பிரதமரும் தனது இரங்கலை தெரிவித்து உள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்தில் விலைமதிப்பற்ற பல உயிர்கள் பறிபோன செய்தி மற்றும் காயம் அடைந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். ஜப்பான் அரசு மற்றும் மக்கள் சார்பாக, உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.