மல்யுத்த வீரர்களின் போராட்டம்… எந்த அறிக்கையும் நான் வெளியிடவில்லை; ரோஜர் பின்னி.!

மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக எந்த அறிக்கையும் நான் வெளியிடவில்லை என ரோஜர் பின்னி விளக்கம்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து அவரைக் கைது செய்யவேண்டும் என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் பல நாட்களாக போராட்டம் நடத்திவருகின்றனர். மேலும் தாங்கள் இந்தியாவிற்காக வென்ற பதக்கங்களையும் புனித கங்கை நதியில் வீசப்போவதாகவும் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இவர்களுக்கு ஆதரவாக 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற அணியினர் கூட்டாக அறிக்கை வெளியிட்டதாக நேற்று தகவல் வெளியானது. தியாகம், கடின உழைப்பின் பலனாக பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக செய்தியறிந்து வேதனையடைந்தோம், இந்த விஷயத்தில் அவசரப்படவேண்டாம் எனவும் வீராங்கனைகளின் குறைகள் விரைவில் தீர்க்கப்படும் என நம்புவதாக அறிக்கை வெளியிடப்பட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து இதற்கு பதிலளித்த பிசிசிஐ தலைவரும் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற அணியில் இருந்தவருமான ரோஜர்பின்னி, மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து நான் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இதனை விளக்க விரும்புவதாகவும், இந்த பிரச்சனை குறித்து உரிய அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் விளையாட்டில் அரசியல் கலக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.