மாமன்னன் தடை கோரிய வழக்கு… சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.!

மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் உதயநிதி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படமான மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையில் நடிகர் உதயநிதி, ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனம் பதில் அளிக்குமாறு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஏஞ்சல் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான உதயநிதி, அத்திரைப்படத்தில் முழுவதும் நடித்துக் கொடுப்பதற்குள் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார், மேலும் இது தனக்கு கடைசி படம் எனவும் அமைச்சரான பிறகு உதயநிதி தெரிவித்தார். இதனையடுத்து ஓடிஎஸ் படத்தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ராம சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில், மாமன்னன் படத்தை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஏஞ்சல் திரைப்படம் 80% சதவீதம் முடிந்துள்ளது, மீதமுள்ள 20% சதவீத பணியும் முடித்துக்கொடுக்குமாறும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்த வழக்கில், வரும் ஜூன் 28க்குள் உதயநிதி, மற்றும் ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனமும் பதில் விளக்கம் தருமாறு உத்தரவிட்டுள்ளார்.