நீட் விவகாரம்! எத்தனை முறை திமுக எம்பிக்கள் குடியரசுத் தலைவரை சந்தித்தார்கள்? – ஜெயக்குமார் கேள்வி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என சொன்னவர்கள் ஏன் செய்யவில்லை? நீட் தேர்வு மசோதா தொடர்பாக எத்தனை முறை திமுக எம்பிக்கள் குடியரசுத்தலைவரை சந்தித்தார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் நிகழும் நீட் தேர்வு தற்கொலைகளுக்கு திமுகவே முழுக்க முழுக்க காரணம்.
தமிழக நலனுக்காகவோ, உரிமைக்காகவோ, திமுக எந்த குரலும் கொடுக்கவில்லை. குடும்ப நலனுக்காக மட்டுமே திமுக குரல் கொடுக்கிறது. ஆனால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்தது அதிமுக. மக்களை திசை திரும்பவதற்காக திமுகவினர் நீட் தேர்வு விவகாரத்தை கையில் எடுக்கின்றனர். நீட் தேர்வு ரத்து தொடர்பாக திமுக எம்பிக்கள் ஏன் குடியரசு தலைவரை ஏன் பார்க்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
17 ஆண்டுகள் திமுக காங்கிரஸ் கூட்டணி என்ன செய்தது, அப்போதே கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றியிருக்கலாமே? தேர்தல் வரும்போது மட்டும் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு பேசி வருகிறார். ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என சொன்னார்கள் ஏன் செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உண்ட கட்சிக்கு ரெண்டகம் செய்யும் வேலைய திருநாவுக்கரசு செய்திருக்கிறார். வரலாற்று சம்பவத்தின் உண்மை தன்மையை மறைத்து பேசும் அவரின் செயல் வருத்தமளிக்கிறது. துச்சாதனர்கள், துரியோதனர்கள் விரைவில் அழிவார்கள் என கூறியவர்தான் திருநாவுக்கரசு. எம்பி சீட்டுக்காக வரலாற்றை மறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் எனவும் கூறியுள்ளார்.