EDRaid: தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!

Enforcement Directorate Logo

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. சென்னை, நுங்கப்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினருடன் தொழில் முறையில் தொடர்புடையோரின் இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

நுங்கப்பாக்கத்தில் உள்ள ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் விக்டர் வீடு, முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் வீடு, அண்ணாநகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில்  அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோத சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், தி.மலை, புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் விளாத்திகுளம் உள்ளிட்ட இடங்களில் சோதனை என தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், புதுக்கோட்டையில் தொழிலதிபர் சாலை ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

அவரது அலுவலகம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ராமச்சந்திரனுக்கு சொந்தமான சென்னையில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்லில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகம், அவரது மைத்துனர் வீடுகள் மற்றும் தொழிலதிபர் கோவிந்தன் என்பவர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மணல்குவாரி, பெட்ரோல் பங்க், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களை செய்து வரும் நிலையில், அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. தமிழகத்தில் பிரபல தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை நடைபெறுவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்