கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!
கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் இதுவரை நான்கு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் கடந்த ஜூன் 25 அன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க அரசியலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, ஆர்.ஜி.கார் மருத்துவமனை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு நடந்து 10 மாதங்களுக்குப் பிறகு, நடந்த இந்த சம்பவம் மேற்கு வங்க அரசியலில் பெரும் சர்ச்சையைத் தூண்டியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரசும், பாஜகவும் நேற்று தனித்தனி போராட்டங்களை நடத்தின.
தற்பொழுது, இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் (SIT) உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்திலிருந்து ஒன்பதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் உடைகள் மற்றும் மொபைல் போன்களை போலீசார் கைப்பற்றி, டிஎன்ஏ சோதனைக்கு தயாராகி வருகின்றன.
வழக்கின் பின்னணி
24 வயதான பாதிக்கப்பட்ட பெண், கல்லூரி வளாகத்தில் உள்ள காவலர் அறையில் இரண்டு மூத்த மாணவர்கள் மற்றும் ஒரு முன்னாள் மாணவரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில், மூன்று முக்கிய குற்றவாளிகளான மனோஜித் மிஸ்ரா, ப்ரோமித் முகர்ஜி மற்றும் ஜைத் அகமது ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது சம்பவத்தின் போது சம்பவ இடத்தில் இருந்த பாதுகாவலரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல் துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, காவலாளியின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருந்ததாகவும், கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளில் அவரது இருப்பு தெளிவாகக் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த நேரத்தில் அவர் பணியில் தனியாக இருந்தாரா அல்லது வேறு யாரிடமாவது இருந்தாரா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.