காலாண்டு விடுமுறைக்கு பின் அக்.3ல் பள்ளிகள் திறப்பு!

தமிழ்நாட்டில் காலாண்டு தேர்வு இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 6 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு செப்.19ம் தேதி தொடங்கிய பொது வினாத்தாள் முறையில் காலாண்டுத் தோ்வு இன்றுடன் நிறைவு பெற்றது. இதற்கு முன்னதாக செப்.15-ஆம் தேதி முதல் 11, 12ம் வகுப்பு மாணவா்களுக்கு காலாண்டு தோ்வு நடைபெற்றது.
இந்த நிலையில், 2023-24ஆம் கல்வியாண்டில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் அக்டோபர் 3-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அரசு/ அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் காலாண்டுத் தேர்வு இன்று நிறைவுபெற்ற நிலையில், விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதியை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு மாறாக, இந்த ஆண்டு கோடை வெயில் காரணமாக ஜூன் 13ம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதன்காரணமாக கடந்த ஆண்டு 9 நாட்கள் வரை காலாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 5 நாள்கள் மட்டுமே விடுமுறை விடப்பட்டுள்ளது.