தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!
தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகம் என்ற துணிக் கடையின் 2வது மாடியில் தீப்பிடித்து எரிந்து வருகிறது.

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த 3 தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தால் பொதுமக்கள், பணியாளர்கள் அலறியடித்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. கரும்புகையுடன் தீ பிடித்ததால் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி, இந்த தீ விபத்து மின் கசிவு (Electrical Short Circuit) காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், தீ விபத்தின் சரியான காரணத்தை உறுதிப்படுத்த, தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை வெளியான தகவல்களின்படி, இந்த தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிகிறது. இருப்பினும், காயமடைந்தவர்கள் குறித்த விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
தீ விபத்து காரணமாக, ரங்கநாதன் தெருவில் கூட்டம் அதிகரித்து, பொதுமக்களிடையே பதற்றம் நிலவியது. காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்தி, பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.