கமல் விவகாரம்: ”நாம் எதிரிகள் அல், நாம் அண்டை மாநிலத்தவர்கள்” – டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்.!
நடிகர் கமல்ஹாசனின் கன்னட மொழி பற்றிய கருத்து சர்ச்சையானது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகா : சென்னையில் நடந்த ‘தக் லைஃப்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ”கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது” என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதைத் தொடர்ந்து, அவரது ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் சர்ச்சையில் சிக்கியது. இவரது இந்த சர்ச்சை கருத்து கர்நாடக ரக்ஷண வேதிகே மற்றும் பிற கன்னட அமைப்புகளால் கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது.
முன்னதாக, முதலமைச்சர் சித்தராமையாவும் கன்னட மொழியின் வரலாற்று ஆழத்தை சுட்டிக்காட்டி, கமல் ஹாசனை விமர்சித்திருந்தார். இதையடுத்து, கடந்த வார வெள்ளிக்கிழமை, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC) ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட தடை விதித்தது. இன்றயை தினம், தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி கமல்ஹாசன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தற்பொழுது, கமல் பேசியதை அரசியலாக்க வேண்டாம்.. நாம் எதிரிகள் அல்ல.. நண்பர்கள் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “நாம் அண்டை மாநிலத்தவர்கள். நாம் இருவரும் ஒன்றாக வேலை செய்கிறோம், வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இங்குள்ள தண்ணீர் தமிழகத்துக்குச் செல்கிறது, அங்குள்ள மக்கள் இங்கு வந்து வசிக்கிறார்கள் நாம் எதிரிகளில்லை. நண்பர்கள். மொழி விவகாரத்தின் பின்னால் இருக்கும் வரலாறு குறித்து எனக்குத் தெரியாது. அதனால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அதேநேரம், இந்தப் பிரச்னையை அரசியலாக்க வேண்டாம். அதைப் பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்றார்.